

கும்பகோணம்:
நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் கும்பகோணத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்வி நிலையங்களில் இந்தி திணிப்பு, நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கும்பகோணத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், க.அன்பழகன், கோவிசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குட்டி தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.
கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தி மொழியை வேண்டாம் என்று கூறவில்லை. அந்த மொழியை திணிக்கக்கூடாது என்று தான் கூறுகிறோம். மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் செயல் தலைவராக மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது நுழைவுத் தேர்வை ரத்து செய்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முன்னாள் துணைவேந்தர் சபாபதிமோகன் பேசினார். முடிவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.