கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்- அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #HIVBlood #PregnantWoman #vaiko #tngovt
கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்- அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை
Published on

சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யாமல் வைக்கப்பட்டிருந்த ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டதால், அவர் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். அரசு மருத்துவமனையின் அலட்சியப் போக்கால் இத்தகைய கொடூரம் நடந்தேறி இருக்கிறது.

இது போன்று அவர்கள் உயிரோடு விளையாடும் சம்பவங்கள் மிகச் சாதாரணமாக நடப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி. கிருமித் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடையவும், குழந்தைப் பேறு எவ்வித குறைபாடும் இன்றி நடந்தேறவும், தகுந்த உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, தமிழக அரசு அப்பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சாத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ள ரத்தம் ஹெச்.ஐ.வி. மற்றும் மஞ்சள் காமாலை தொற்றுநோய் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், 2016-ம் ஆண்டே ரத்த தானம் செய்தவருக்கு ஹெச்ஐவி பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது.

தவறிழைத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1 கோடி ரூபாய் நஷ்டஈடும், உரிய உயர் மருத்துவ சிகிச்சையும் தமிழக அரசு வழங்க வேண்டும். மிக அடிப்படையான மருத்துவ சேவைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவ மனையில் கூலித் தொழிலாளி ஒருவரின் கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி.ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

கர்ப்பிணிப் பெண்ணின் ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்துள்ளது. மருத்துவ சேவை துறையில் எடப்பாடி பழனிசாமி அரசு அலட்சியமாக நடந்து வருகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.

சாத்தூர் சம்பவத்திற்குப் பிறகாவது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரத்த மாதிரிகளை முழுமையாகச் சோதிக்கும் வசதிகள் செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இந்த அவல நிலைக்குக் காரணமான மருத்துவ அலுவலர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட பெண்மணியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென மனித நேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘சாத்தூரில், சுகாதாரத் துறையினரின் அலட்சியப் போக்கினாலும் நிர்வாகப் பிழையினாலும் எச்.ஐ.வி வைரஸ் ரத்தம் செலுத்தப்பட்டு பாதிப்படைந்துள்ள கர்ப்பிணிப் பெண்ணிற்கு நடந்த கொடுமை அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அப்பெண்ணிற்கு தற்காலிக நிவாரணங்களுடன், நீடித்த உதவியும், நிரந்தரப் பாதுகாப்பும் அவசியம்.

ஏழைத்தாய்க்கு நடந்துள்ள இக்கொடூரம் குறித்து மக்களாகிய நாமும் அலட்சியப்போக்கினைக் காட்டாமல், நம் அனைவருக்குமான ஒரு அபாயக்குறியாக கருதி விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #HIVBlood #PregnantWoman #vaiko #tngovt

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com