

அவனியாபுரம்:
மதுரையை அடுத்துள்ள பெருங்குடியை சேர்ந்தவர் மலைராஜன். இவரது மகன் அருண்ராஜ் (வயது25). போலீஸ்காரரான இவர் சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அருண்ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சக போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். பணி நெருக்கடி காரணமாக அருண்ராஜ் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினையா? என விசாரணை நடந்து வருகிறது. நேற்று மாலை அருண்ராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது தந்தை மலைராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் ஆம்புலன்சு மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. நள்ளிரவு 2 மணிக்கு ஆம்புலன்சு பெருங்குடிக்கு வந்தது. அருண்ராஜ் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கதறி துடித்தனர். அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் பெருங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதிராஜா ஆகியோர் அருண்ராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து பெருங்குடியில் உள்ள சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்யப்பட்டு போலீஸ்காரர் அருண்ராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. #tamilnews