

காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பேஸ்புக் பதிவில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறான கருத்துக்களை கூறி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
எஸ்.வி.சேகர் மீது பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 24 நாட்களாக எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார். சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனால் எஸ்.வி.சேகர் மீது கைது நடவடிக்கை பாயும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போலீசார் அதற்கான எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கு தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார். எஸ்.வி.சேகரை போலீசார் தேடி வரும் நிலையில் அவர் சர்வ சாதாரணமாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் எம்.பி. உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது. பொன்.ராதாகிருஷ்ணனுடன் எஸ்.வி.சேகர் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலை தளங்களிலும் கண்டன குரல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.