திருச்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: தலைவர்கள் கடும் கண்டனம்

திருச்சியில் இன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருச்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: தலைவர்கள் கடும் கண்டனம்
Published on

நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் 8-ம் தேதி இன்று திருச்சியில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 8 கட்சி தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த கண்டனப் பொதுக் கூட்டத்திற்காக திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பொதுக்கூட்டதிடலுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்தனர். மாலை 5 மணியளவில் பொதுக்கூட்டம் தொடங்க இருந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், திருச்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்தது. கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதற்கு தலைவர்கள் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

திட்டமிட்டு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை இபிஎஸ் அமல்படுத்தி வருவதாக முத்தரசன் குற்றம்சாட்டினார். மத்திய அரசின் மனுதர்ம கொள்கையை அமல்படுத்த இபிஎஸ் உதவி செய்து வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையை யாரும் பறிக்க முடியாது என ராமகிருஷ்ணன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com