ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியில்லை - யாருக்கும் ஆதரவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியில்லை - யாருக்கும் ஆதரவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
Published on

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, அமைப்பு செயலாளர் ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள ‘பீப்பிள் ஆப் இந்தியா’ என்ற புத்தகத்தில், 1985-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயின்படி இந்தியா முழுவதும் 4 ஆயிரத்து 635 சமூகங்களும், தமிழகத்தில் மட்டும் 359 சமூகங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த 359 சமூகங்களும் பங்கு கொள்ளும் வகையில் தமிழக அரசாங்கம் இல்லை. பா.ம.க. ஆட்சிக்கு வரும் போது இது சமன் செய்யப்படும்.

எல்லா சமுதாயத்துக்கும் நீதி, சுதந்திரம் கிடைக்க வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது. தற்போது பா.ம.க. 2-வது சுதந்திர போராட்டம் நடத்தி வருகிறது. எனவே, ஊழல் கட்சிகளை தவிர்த்து இதுவரை ஆளாத கட்சிகள், அதாவது தி.மு.க., அ.தி.மு.க.வை தவிர்த்து பிற கட்சிகள் எங்களோடு வாருங்கள் என தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறேன். இன்றும் அழைப்பு விடுக்கிறேன்.

தமிழ்நாடு தற்போது புரையோடி இருக்கிறது. இந்த புரையோடிய புண்ணை குணப்படுத்த தக்க நேரம் இது. மருந்து, மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்த முடியாது. அறுவைசிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். அதற்கு அன்புமணி தேவைப்படுகிறார். அவர் கச்சிதமாக அறுவைசிகிச்சை முடித்து தமிழக மக்களை காப்பாற்றுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகம் மட்டும் அல்ல வெளிநாடு வாழ் தமிழர்களும் தமிழகத்தின் தற்போதைய நிலையை கண்டு ஆத்திரத்தில் உள்ளனர். ஜெயலலிதாவின் இறப்பால் மட்டும் வெற்றிடம் ஏற்படவில்லை. கடந்த 10, 15 ஆண்டுகளாக இருந்து வருகிறது. பா.ம.க. தமிழகத்தின் 3-வது கட்சியாக வளர்ந்து உள்ளது.

தற்போது, அ.தி.மு.க. பிளவுபட்டு உடைந்து உள்ளது. இதனால், 2-வது பெரிய கட்சியாக பா.ம.க. மாறி இருக்கிறது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. 100 சதவீதம் வெற்றி பெற்று தமிழ்நாட்டை ஆளும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த இடைத்தேர்தலின் போது பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த கட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே வேட்பாளர்கள், அதே கட்சிகள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறையும் தேர்தல் நியாயமாக நடக்காது. மீண்டும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பார்கள். இந்த காரணங்களால் பா.ம.க. ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடாது. யாருக்கும் ஆதரவு அளிக்கவும் இல்லை. இது டாக்டர் ராமதாஸ் தலைமையில் கூடிய உயர்நிலை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. ரூ.4 ஆயிரம், தி.மு.க. ரூ.2 ஆயிரம் வழங்கியது. அ.தி.மு.க.வின் இன்னொரு அணியும் காசு கொடுத்தது. இது அவர்களின் தன்மான பிரச்சினை. எனவே இன்னும் அதிகமாக பணம் கொடுப்பார்கள். ஆர்.கே.நகர் மக்கள் பணத்துக்காக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com