67-வது பிறந்த நாள்: பிரதமர் நரேந்திர மோடி தாயாரிடம் ஆசி பெற்றார்

பிரதமர் நரேந்திர மோடி தனது 67-வது பிறந்த நாளையொட்டி தாயார் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
67-வது பிறந்த நாள்: பிரதமர் நரேந்திர மோடி தாயாரிடம் ஆசி பெற்றார்
Published on

ஆமதாபாத்:

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 67-வது பிறந்த தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் தான் பிறந்த தினத்தன்று, பூர்வீக கிராமத்துக்கு சென்று தாயை சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதன்படி பிரதமர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு குஜராத் வந்தார். ஆமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க தலைவர்கள் மிகவும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் காந்தி நகரில் உள்ள தனது, சொந்த ஊருக்கு சென்றார்.

அங்கு தனது சகோதரர் வீட்டில் தங்கியிருக்கும் தாயார் ஹிராபாயை மோடி சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். தாயின் காலில் விழுந்து அவர் வணங்கினார். அவருக்கு தலையில் தொட்டு ஆசி வழங்கிய ஹிராபாய் வாயில் இனிப்பும் ஊட்டி விட்டார். இதையடுத்து சிறிது நேரம் அவர் தாயாருடன் பேசிக்கொண்டிருந்தார்.

பூர்வீக வீட்டை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி அங்கு தன் உறவினர்கள் சிலரையும் சந்தித்துப் பேசினார். அவர்களிடம் அவர் உடல்நலம் பற்றி விசாரித்தார்.

சிறிது நேரம் கழித்து தனது வீட்டில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டார். நர்மதா அணைக்கட்டை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் புறப்பட்டு சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com