

லண்டன்:
பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் போய்ச் சேர்ந்தார்.
அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார். அதையடுத்து, பிரதமர் மோடி, சுவீடன் நாட்டின் மன்னர் 16-ம் காரல் கஸ்டாபை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சுவீடன் நாட்டில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று பிரிட்டன் வந்தார். ஹீத்ரோ விமானநிலையம் வந்த பிரதமர் மோடியை பிரிட்டன் வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் நேரில் வரவேற்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடி முதலில் பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், பசவேஸ்வரா பிறந்தநாளை முன்னிட்டு இங்கு வந்து இந்திய மக்களுடன் கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, லண்டனில் உள்ள அறிவியல் மியூசியத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் மியூசியத்தை சுற்றிப் பார்த்தனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில், இந்த 5000 ஆண்டுகள் அடங்கிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வைக்கப்பட்டுள்ள மியூசியத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் மற்றும் பிற நாட்டு விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். #PMModi #UKVisit #Tamilnews