

காஷ்மீரில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்-மந்திரியாக இருந்த மெகபூபா முப்திக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பா.ஜனதா விலக்கிக் கொண்டது.
அதைதொடர்ந்து காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் ஜனநாயக கட்சிக்கான ஆதரவை விலக்கி கொண்ட பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் புறப்பட்டு சென்றார். காலை லடாக்கில் உள்ள லே நகரை சென்றடைந்தார். லே பகுதியில் அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர், ஜம்முவில் ரூ.35 கோடி மதிப்பிலான திட்டங்களையும், காஷ்மீரில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.
விஜய்பூர், அவந்தி போரா ஆகிய 2 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டினார். விஜய்ப்பூரில் நடைபெறும் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று பிற்பகல் மோடி உரையாற்றுகிறார்.
எனவே, பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.