நான் சொல்வதை செய்து முடிப்பேன்- பிரதமர் மோடி உறுதி

பாகிஸ்தானுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்வதை செய்து முடிப்பேன் என்று அரியானாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

சண்டிகர்:

சண்டிகர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசும்போது அரியானாவில் இருந்து அண்டை நாடான பாகிஸ்தானுக்கு தண்ணீர் தர மாட்டோம் என்றார்.

அதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நதிநீரை வேறு வழியில் திருப்பிவிட்டால் தாக்குதல் நடத்துவது குறித்து பரிசீலிப்போம் என எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், நேற்று அரியானாவில் கோகனா மற்றும் ஹிசார் ஆகிய இடங்களில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பாகிஸ்தானின் மிரட்டலுக்கு பதில் அளித்தார்.

அவர்கூறும்போது, நான் ஒரு தடவை முடிவெடுத்தால் அதை செய்து முடிப்பேன். அரியானாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் விட மாட்டோம் என்று தெரிவித்தேன். அதனால் அந்த நாடு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

தற்போது பாகிஸ்தானுக்கு வழங்கும் தண்ணீரை நிறுத்துவது அரியானா விவசாயிகளின் உரிமை. மோடி ஆகிய நான் சொன்னதை செய்து முடிப்பேன். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டது என்றார்.

குடிநீர் மற்றும் பாசனத்துக்காக எனது தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடியை ஒதுக்கி செலவு செய்துள்ளது. இதே போன்று ஜல் ஜீவன் மி‌ஷன் மூலம் அடுத்த 5 ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

இதன் மூலம் நமது தாய்மார்கள், சகோதர, சகோதரிகள் பயனடைவார்கள். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதிப்படமாட்டார்கள். கிராம புறங்களில் நீர் திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். வீட்டு உபயோகத்துக்குரிய தண்ணீர் மறு சுழற்சி மூலம் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அது 2024-ம் ஆண்டிற்குள் சாத்தியமாகும் என்று நம்புகிறேன்.

அரியானாவில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றமை இல்லை. சண்டையிட்டு கொள்கின்றனர். இங்கு பா.ஜனதா அரசு வந்த பிறகு தான் வளர்ச்சி உருவாகி உள்ளது.

ஹிசார் நகரில் விமானங்கள் கட்டும் தொழிற்சாலை உள்ளது. டெல்லி-ஹிசார் இடையே 6 வழிச்சாலை உருவாகிறது. இதன் மூலம் அப்பகுதியில் வளர்ச்சி மேம்பட்டுள்ளது. சோனிபட் நிறைய தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வழங்கி வருகிறது. மல்யுத்த வீரர்களையும் தந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது.

காங்கிரஸ் கட்சியின் போது அரியானாவில் ஊழல் மலிந்து இருந்தது. விளையாட்டில் கூட அது பிரதிபலித்தது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு முதல்-மந்திரி மனோகர் லால் கூட்டணி ஆட்சியில் ஊழல் இல்லை.

இவ்வாறு மோடி பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com