இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி- கைதான நபர்களின் வீடுகளில் என்ஐஏ சோதனை

இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். #NIARaids
கோவை உக்கடத்தில் சோதனை நடந்து வரும் ஆட்டோ பைசல் வீடு
கோவை உக்கடத்தில் சோதனை நடந்து வரும் ஆட்டோ பைசல் வீடு
Published on

தமிழகத்தில் இந்து அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்களை கொலை செய்ய பயங்கரவாத அமைப்பினர் சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ச்சியாக இந்து முன்னணி பிரமுகர்கள் மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர்.

இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட் டது. இதன்படி தேசிய புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா என்ற அமைப்பின் நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது கோவை ரெயில் நிலையம் அருகே சதி திட்டம் தீட்டிய கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, திண்டிவனம் இஸ்மாயில், ஓட்டேரி சலாவுதீன், பல்லாவரம் சம்சுதீன் மற்றும் இவர்களை அழைத்து செல்ல வந்த கோவை என்.எச்.ரோடு பகுதியை சேர்ந்த ஆசிக் ஆகியோர் பிடிபட்டனர்.

இஸ்மாயில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக இருந்துள்ளார். மற்ற 4 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாட்டோடு இருந்துள்ளனர். சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது.

அர்ஜூன் சம்பத், அன்பு மாரி ஆகியோர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த தகவல்கள் வெறுப்பேற்றும் வகையில் இருந்ததால் அவர்களை கொல்ல திட்டமிட்டதாக 5 பேரும் வாக்குமூலம் அளித்தனர். இதற்கு உடந்தையாக இருந்த உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பைசல், குனியமுத்தூரை சேர்ந்த சாகுல் அமீது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம், மதகலவரத்தை தூண்டும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது, கூட்டுசதி, சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு கடந்த மாதம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவுக்கு மாற்றப்பட்டது. கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கை விசாரித்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், இதுதொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்து சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து வழக்கு ஆவணங்களை கோவை போலீசார் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக அர்ஜூன் சம்பத், அன்புமாரி ஆகியோர் கடந்த வாரம் ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராகினர். அப்போது தங்களுக்கு ஏற்கனவே பல்வேறு செல்போன் நம்பர்களில் இருந்து கொலை மிரட்டல் வந்ததற்கான ஆதாரங்களை ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் கைதான ஆசிக், ஆட்டோ பைசல், அன்வர் ஆகிய 3 பேரின் கோவை வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.

கோவை என்.எச்.ரோடு சந்திரன் வீதியில் உள்ள ஆசிக்கின் வீடு, உக்கடம் மஜித்காலனி வீரவாஞ்சி நகரில் உள்ள பைசலின் வீடு, குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் சாலையில் உள்ள அன்வர் ஆகியோரின் வீடுகளுக்கு தனித்தனி குழுவாக சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

எம்.கே.பி. நகரில் ஜாபர்சாதிக் வீட்டில் சோதனை நடைபெறும் காட்சி

கைதானவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் எந்த வகையில் தொடர்பில் இருந்தார்கள்? என்பதை கண்டுபிடிப்பதற்காகவும், இது தொடர்பாக ஆதாரங்களை சேகரிப்பதற்காகவும் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com