தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை அரசாணை வெளியிடப்பட்டது
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த 2019, ஜனவரி 1-ந்தேதி முதல் தடை பிறப்பிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 5-ந்தேதி சட்டசபையில் அறிவித்தார். இதற்கான அரசாணை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.
அதில், மக்கள் தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உடலுக்கு மிகுந்த ஆபத்து விளைவிக்க கூடியவையாகும். இந்திய அரசியலமைப்பு சட்டம் 48(ஏ) பிரிவின்படி மக்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து, மேம்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
எனவே தினமும் மக்கள் பயன்படுத்தும் கேரி பேக்குகள், உணவுப் பொருட்கள் சுற்றி வழங்கப்படும் பிளாஸ்டிக் அட்டைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் ஸ்டிராக்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் கழிவு நீர் வடிகால் பகுதிகளிலும் அடைத்து பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கிறது. இந்த தடை ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

