

தஞ்சாவூர்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் 15 பேர் கல்லூரி முன்பு உள்ள சாலையில் இன்று காலை 9.40 மணிக்கு திடீரென அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.
திராவிடர் மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் அறிவேந்தி தலைமை தாங்கினார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் சுமார் 1 மணி நேரம் நடந்தது.
இதேபோல் கும்பகோணம் கலைக்கல்லூரி மாணவர்கள் அந்த கல்லூரி முன்பு பெரியார் சிலையை உடைப்பை கண்டித்தும், ரத யாத்திரையை தடை செய்ய கோரியும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி அமைப்பாளர் பகத் தலைமை தாங்கினார். செயலாளர் தீபக் முன்னிலை வகித்தார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் 20 பேர் கலந்து கொண்டனர். #tamilnews