மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம். விரைவில் அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 45 கி.மீட்டர் தூரத்துக்கு 32 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகளின் கார், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடம் வசதி செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் தினமும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

வாகனங்களை நிறுத்துவதற்கு குறிப்பிட்ட கட்டணங்களை பணமாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வசூலித்து வருகிறது.

இந்த நிலையில் மெட்ரோ, ரெயில் நிலையங்களில் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணத்தை ஸ்மார்ட் கார்டு மூலம் செலுத்தும் புதிய வசதியை மெட்ரோ நிர்வாகம் தொடங்க திட்டமிட்டது.

அதன்படி கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வாகன பார்க்கிங் கட்டணத்தை ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் செலுத்தும் வசதி தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் மூலம் ரூ.40 லட்சம் வசூல் கிடைக்கிறது. இதனை நவீனமாக்கும் வகையில் பயணிகள் எளிதாக கட்டணம் செலுத்தும் வகையிலும் இந்த ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் வாகன கட்டணம் செலுத்தும் வசதி தொடங்கப்படுகிறது.

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பயணிகள் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் வாகன கட்டணம் செலுத்தலாம்.

இதேபோல் விமான நிலையம், திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, அசோக்நகர், கிண்டி, மண்ணடி, நங்கநல்லூர் ரோடு, மீனம்பாக்கம் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் கட்டணம் செலுத்தும் வசதி விரைவில் தொடங்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் பயணிகள் இந்த வசதிகள் மூலம் பயன் பெறுவார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com