

புதுடெல்லி:
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்புஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் ராணுவ கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது.
இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றத்தை குல்புஷன் ஒப்புக் கொண்டது போன்ற வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டது. இதையடுத்து, குல்புஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டதால் அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குல்புஷன் ஜாதவை பார்க்க அவரது மனைவி மற்றும் தாயாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என இந்தியா சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அவர்களுக்கு அங்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதனையடுத்து, அவர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா தந்தது.
இதையடுத்து, கடந்த 25-ம் தேதி ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்தித்தனர். அப்போது குல்புஷன் மனைவி மற்றும் தாயார் ஆகியோரை பாகிஸ்தான் அரசு அவமரியாதையாக நடத்தியது என இந்தியா குற்றம்சாட்டியது.
இந்நிலையில், மனைவி மற்றும் தாயார் ஆகியோரை பார்த்தது தொடர்பாக குல்புஷன் ஜாதவ் பேசியுள்ள புதிய வீடியோவை பாகிஸ்தான் இன்று வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் குல்புஷன் ஜாதவ் பேசியதாவது:
என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். பாகிஸ்தான் அரசு என் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது. அவர்கள் என்னை துன்புறுத்துவதில்லை.
என்னை பார்த்து மகிழ்ந்த எனது தாய், மீண்டும் ஒருமுறை என்னை வந்து பார்ப்பதற்காக நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், நான் இந்திய கடற்படையின் வேலை செய்தவன் என்பதை இந்திய மக்கள், இந்திய அரசாங்கம் உள்பட அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் பேசியுள்ளார்.
குல்புஷனை வற்புறுத்தி தங்களுக்கு சாதகமாக பேசவைத்துள்ளதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. #kulpushanjadhav #pakistan #tamilnews