

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் செய்தி மற்றும் கலாசார மந்திரியாக இருப்பவர் பையாசூல் ஹசன்சோகன். இவர் “சமா” செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் பசுவின் மூத்திரத்தை குடித்து வாழ்பவர்கள். அவர்களை போல பாகிஸ்தானியர்கள் இல்லை.
பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு தனி கொடி இருக்கிறது. தனி அடையாளம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு அப்படி எந்த அடையாளமும் இல்லை. இந்தியாவில் இந்துக்கள் சிலை வழிபாடு செய்பவர்கள். நாங்கள் அப்படி சிலை வழிபாடு செய்வது இல்லை. நாங்கள் செய்யும் வழிபாட்டை இந்தியர்களால் செய்ய இயலாது என தெரிவித்திருந்தார்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மந்திரி இப்படி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் முதல் மந்திரி உஸ்மான் பஸ்தர்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் மந்திரி சோகனின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்நிலையில், இந்துக்களை தரக்குறைவாக விமர்சித்த பையாசூல் ஹசன் சோகன் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
ஹசன் சோகனுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்த நிலையில், அவரை பதவி விலகுமாறு பஞ்சாப் மாநில முதல் மந்திரி உஸ்மான் பஸ்தர் வலியுறுத்தினார். இதையடுத்து, ஹசன் சோகன் தனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரியிடம் அளித்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. #FayyazulHassanChohan