

இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூதுவை அழைத்து இந்தியா எதிர்ப்பை பதிவு செய்தது. அனுகூலமான நாடு என பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை திரும்ப பெற்றது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிகாரியை டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆனால், புல்வாமா தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசும் டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரை நாட்டிற்கு வரும்படி அழைத்தது. அதன்படி பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் டெல்லியில் இருந்து ஆலோசனை நடத்துவதற்காக தனது நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். #PulwamaAttack #PakistanEnvoy