

பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனரும் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீது. மும்பையில், 2008ல் நடந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீசை தேடப்படும் குற்றவாளியாக ஐ.நா. அறிவித்து உள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா மற்றும் ஹர்கட்-உல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐ.நா. தடை விதித்துள்ளது.
ஐ.நா. பட்டியலில் மொத்தம் 27 தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் உள்ளன. ஹபீஸ் சயீதை தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன.
இந்நிலையில் ஹபீஸ் சயீத் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்துள்ள தனி நபர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய வகை செய்யும் அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைன் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ளார். ஹபீஸ் சயீத்தை தீவிரவாதியாக அறிவித்து சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்த தேசிய தீவிரவாத எதிர்ப்பு ஆணையமும் உறுதி செய்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தான் போலீசார் ஹபீஸ் சயீதின் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைமையகம் அருகே போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.