பாகிஸ்தானில் 16 அப்பாவி மக்களை கொன்று குவித்த 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி, 16 அப்பாவி மக்களை கொன்று குவித்த 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவிட்டார்.
பாகிஸ்தானில் 16 அப்பாவி மக்களை கொன்று குவித்த 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி, 16 அப்பாவி மக்களை கொன்று குவித்ததாகவும், 8 பேரை படுகாயப்படுத்தியதாகவும் 4 தீவிரவாதிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ராணுவ கோர்ட்டு விசாரித்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், மரண தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா நேற்று முன்தினம் உறுதி செய்து உத்தரவிட்டார்.

இது பற்றி பாகிஸ்தான் ராணுவ ஊடகப்பிரிவு ஐ.எஸ்.பி.ஆர். விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பொதுமக்களை கொன்றும், கடத்தியும், பள்ளிகளை அழித்தும், கல்வி நிறுவனங்கள்மீது தாக்குதல்கள் நடத்தியும், பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் தொடுத்தும் குற்றம் புரிந்த 4 தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் ராணுவ தளபதி உறுதி செய்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4 தீவிரவாதிகளும் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிற தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள், இவர்கள் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்த ஆரம்ப விசாரணையிலும், ராணுவ கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையிலும் தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. 

X

Maalai Malar
www.maalaimalar.com