இமாம் சதம் வீண்- 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வென்றது தென் ஆப்பிரிக்கா

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. #SAvPAK #ImamUlHaq
இமாம் சதம் வீண்- 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வென்றது தென் ஆப்பிரிக்கா
Published on

செஞ்சூரியன்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக், பகர் சமான் ஆகியோர் களமிறங்கினர்.

பகர் சமான் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய பாபர் அசாம் இமால் அல் ஹக்குடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தனர். 

பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த பாபர் அசாம் 69 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய மொகமது ஹபீசும் அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் இமாம் உல் ஹக் நிலைத்து நின்று ஆடி ஐந்தாவது சதத்தை பதிவுசெய்தார். அவர் 116 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் இமாத் வாசிம் அதிரடியாக ஆட பாகிஸ்தான் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. வாசிம் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா சார்பில் ஸ்டெயின், ரபடா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்பின் சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்தது. 

தென் ஆப்ரிக்க அணி 33 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தபோது பலத்த மழை பெய்தது. அப்போது ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 102 பந்தில் 131 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை நீடித்ததால் அத்துடன் ஆட்டத்தை முடித்துக்கொள்ள நடுவர்கள் முடிவு செய்தனர். பின் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்ரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் குவித்த ரீஸா ஹென்றிக்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். #SAvPAK #ImamUlHaq

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com