பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவராக நவாஸ் நீடிக்கிறார்: புதிய மசோதா நிறைவேறியது

பாகிஸ்தானில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவராக நீடிக்க அனுமதிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவராக நவாஸ் நீடிக்கிறார்: புதிய மசோதா நிறைவேறியது
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி தலைவரான நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக, பனாமா ஆவணங்கள் மூலம் அம்பலமானது. இதுபற்றி விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டது. மேலும், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிட்டது. இதனால் பிரதமர் பதவியையும் எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார் நவாஸ் ஷெரிப்.

இதையடுத்து, ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கி உள்ள நவாஸ் செரீப் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை அந்நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பான பொறுப்புடைமை நீதிமன்றம் முடக்கியது. இது நவாஸ் ஷெரீப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தால் நவாஸ் ஷெரீன் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், கட்சி தலைவர் பதவியில் நீடிக்கும் வகையில் ‘தேர்தல்-2017 மசோதா’ பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபர், கட்சி தலைமை பொறுப்புகளை வகிக்க சட்டப்படி அனுமதிக்கக் கூடாது என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி திருத்தம் கொண்டு வந்தது. இந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது. அதன்பின் நடந்த வாக்கெடுப்பில், தேர்தல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளான முத்தாகிதா குவாமி இயக்கம், பலுசிஸ்தான் தேசிய கட்சி ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஊழல் வழக்கு, சொத்துக்கள் முடக்கம் உள்ளிட்ட சிக்கல்களை சந்தித்து வரும் நவாஸ் ஷெரீப்புக்கு, இந்த புதிய மசோதா ஆறுதலாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com