

சென்னை:
சென்னையில் மாணவர்களின் பஸ்தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோடை விடுமுறைக்குப்பின் நேற்று கல்லூரி திறந்த முதல் நாளே மாநில கல்லூரி மாணவர்களும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பஸ்தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மாநிலக்கல்லூரி மாணவர்கள் சேப்பாக்கம் வழியாக சென்ற பஸ்களில் கூரையின் மீது ஏறி ஆட்டம் போட்டபடி சென்றனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்தனர். போலீசை பார்த்ததும் மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். கையில் சிக்கிய 4 மாணவர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பஸ்களின்மீது ஏறி ஆடியபடியே சென்றனர். கீழ்பாக்கம் போலீசார் அவர்களை தடுத்தனர். சிதறி ஓடிய மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்லூரி வளாகத்தில் பச்சையப்பா சிலைக்கு மாலை அணிவிக்க போவதாக மேளதாளத்துடன் சென்றனர்.
அவர்களுடன் முன்னாள் மாணவர்களும்,வெளி ஆட்களும் சென்றனர். அவர்களை ஆசிரியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
இதையடுத்து மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டார்கள். கற்கள், தென்னைமட்டை போன்றவற்றை வீசினார்கள். இதில் கல்லூரி முதல்வர் காளிராஜ் மண்டை உடைந்தது. அங்கிருந்துஅவரது கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
காயம் அடைந்த கல்லூரி முதல்வர் காளிராஜ் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசில் காளிராஜ் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலன் 31 பேர் மீது வழக்குபதிவு செய்தார்.
அவர்களில் 18 பேர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள். மீதி பேர் வெளி ஆட்கள்.
அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் 22 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். மற்றவர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இதையடுத்து 22 பேர் புழல் சிறையிலும், 9 பேர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 31 பேர் மீதும் கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், கற்களால் வீசுதல், அத்துமீறி நுழைதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்பட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவுகள் 147, 148, 341, 342, 294 சி, 353, 332, 336, 506 (11) பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சுதீஸ், உதய சூரியன், ராஜேஷ், அன்பு, லட்சுமி, நரேந்திரன், சிற்பி, வெங்கடேஷ் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.