

திருச்சி:
தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி பிரச்சினை தொடர்பாக 4 மாநில தலைமை செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக தலைமை செயலாளர் பங்கேற்றார்.
6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதில் உறுதியாகவும் உள்ளது. அதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனைப்படி தமிழக தலைமை செயலாளர் எடுத்து கூறியுள்ளார்.
தமிழகத்தில் மூடப்பட்ட அரசு மணல் குவாரிகளை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மணல் குவாரிகளை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ரத்தினவேல் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, என்.ஆர்.சிவபதி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். #tamilnews #opanneerselvam #tngovt #sandquarries