

சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது. தற்போது 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
தினமும் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் 2½ நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயிலை இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதனால் மெட்ரோ ரெயிலில் தினமும் பயணம் செய்வோர் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மெட்ரோ நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மெட்ரோ ரெயிலில் தற்போது தினமும் 1 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். அவசர நேரங்களில் (பீக் அவர்ஸ்) காலை 8 மணி-10 மணி, மாலை 5 மணி- 8 மணி வரை 35 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சாதாரண நேரங்களில் 25 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
பயணிகள் வசதிக்காகவும் கூட்டத்தை அதிகரிக்க 2½ நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.