ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது

ஊரடங்கு காலத்திற்கு பிறகு பொது போக்குவரத்து துவக்கப்பட உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள்
Published on

சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஆனால், பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளித்ததுபோல், பொது போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

தனி மனித இடைவெளியை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதால் பேருந்துகளில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பயணிகள் அளவைவிட பாதி அளவிலேயே பயணிகளை ஏற்ற முடியும். இதனால் கடும் நஷ்டம் ஏற்படும். 

எனவே, ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது புதிய கட்டணம் அமலுக்கு வரும் எனவும் அவர் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com