சிறுவயதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கான சலுகைகள் ரத்து: டிரம்ப் முடிவுக்கு ஒபாமா எதிர்ப்பு

அமெரிக்காவுக்குள் சிறுவயதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கான வேலைவாய்ப்பை பறிக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளது கொடூரமான நடவடிக்கை என முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சித்துள்ளார்.
சிறுவயதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கான சலுகைகள் ரத்து: டிரம்ப் முடிவுக்கு ஒபாமா எதிர்ப்பு
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க குடியுரிமைச் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, சிறுவயதிலேயே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள், வளர்ந்த பின்னர் அமெரிக்க நிறுவனங்களில் பணி புரிவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.

"குழந்தை குடியேற்றவாசிகளுக்கான நிறுத்தி வைக்கப்பட்ட நடவடிக்கை' (டிஏசிஏ) என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான முடிவை தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இதனை டிரம்ப் பரிசீலிக்க இருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்து ஆயிரக்கணக்கானோர் வெள்ளை மாளிகையின் முன்னர் குவிந்து டிரம்புக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பினர்.

இந்நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு கொடூரமானது எனவும், சட்டரீதியிலான நடவடிக்கை இல்லை என முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “சிறுவயதில் அவர்கள் குடியேறியது தவறான ஒன்றாக இல்லை. எனவே, அவர்களது எதிர்காலம் பாதிக்கும் வகையில் நாம் நடந்துகொள்ள கூடாது” என ஒபாமா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com