

ஆண்டிப்பட்டி:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆண்டிப்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வினால் தமிழக மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராமேசுவரத்துக்கு வந்த பிரதமர் மோடியிடம் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
சேலத்தை அடுத்த எருமைப்பட்டியில் உள்ள கச்சராயன் குட்டையை பார்வையிடுவதற்காகவும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் சேலத்தில் நடைபெற இருந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொதுமக்களின் பிரச்சனைக்காக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. இது போன்ற சம்பவங்களை தமிழக அரசு முறையாக கையாண்டிருக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் கைது நடவடிக்கை தேவையற்றது.
உள்ளாட்சி தேர்தலை மற்ற கட்சியினரை போல் நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அந்த தேர்தலில் எங்கள் அணி பெரும்பான்மையை நிரூபிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.