லடாக் எல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை - இந்திய விமானப்படை தளபதி பேச்சு

லடாக் எல்லையில், ‘போரும் இல்லை, அமைதியும் இல்லை’ என்ற சூழ்நிலை நிலவுகிறது என்று விமானப்படை தளபதி கூறினார்.
இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா
இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா
Published on

புதுடெல்லி:

கிழக்கு லடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் அத்துமீறல் காரணமாக, கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. கடந்த ஜூன் 15-ந் தேதி, இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகும் இன்னும் அமைதி திரும்பவில்லை. சமீபத்தில், இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்ட ரபேல் விமானங்கள், லடாக் பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றன.

இந்த நிலையில், இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா நேற்று டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

நமது வடக்கு (லடாக்) எல்லையில், ‘போரும் இல்லை, அமைதியும் இல்லை’ என்ற அசாதாரண சூழ்நிலை காணப்படுகிறது. நமது படைகள் எந்த அத்துமீறலையும் சந்திக்க தயார்நிலையில் இருப்பது உங்களுக்கே தெரியும்.

சமீபத்தில் இணைக்கப்பட்ட ரபேல் விமானங்களும், ஏற்கனவே வாங்கப்பட்ட சி-17 குளோப் மாஸ்டர் விமானங்களும், சினூக் மற்றும் அபாச்சி ஹெலிகாப்டர்களும் இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரித்துள்ளன. எதிர்காலத்தில் நடக்கும் எந்த மோதலிலும் நாம் அடையப்போகும் வெற்றிக்கு விமானப்படை முக்கிய காரணியாக இருக்கும்.

எனவே, நமது விமானப்படை, எதிரி நாடுகளை விட தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பது முக்கியம் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com