சபரிமலை வழக்கு 3 வாரத்திற்கு ஒத்திவைப்பு

சபரிமலை வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டு உள்ளது.
சபரிமலை கோவில்
சபரிமலை கோவில்
Published on

புதுடெல்லி:

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது இல்லை என்ற நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், அந்த கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 60-க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த மேல்முறையீட்டு வழக்கை 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வில், சபரிமலை வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று முதல் விசாரணை நடைபெறும் என கூறப்பட்டிருந்தது.

அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, இது வெறும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விஷயம் அல்ல. சபரிமலை கோவில் பிரச்சினையில் நவம்பர் 14 ம் தேதி 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு எழுப்பிய கேள்விகளை மட்டுமே விசாரிப்போம். அனைத்து மதத்திலும் இருக்க கூடிய விஷயங்களையும் விசாரிக்க இருக்கிறோம்.

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற 50 சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை. கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்குள் பெண்கள் நுழைவது வழிபாட்டு  முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை விசாரிக்க இருக்கிறோம்’ என  கூறினார்.

இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து அனைத்து தரப்பும் பதில் அளிக்க 3 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர்  வழக்கை 3 வாரத்திற்கு சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com