

புதுடெல்லி:
நாட்டில் உள்ள சில அரசு வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்கள் வாராக்கடன்களை வசூலிக்க அடியாட்களை அனுப்பி கடன் பெற்ற நபர்களை கேவலமாக நடத்துவது நடைமுறையில் உள்ளது.
இதுபோன்ற சம்பவங்களின்போது கைகலப்புகளும் நடைபெறுவதுண்டு. சில இடங்களில் அடியாட்களின் அத்துமீறல்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், வாராக்கடன்களை வசூலிக்க அடியாட்களை அனுப்பி வைக்கும் அதிகாரம் எந்த வங்கிக்கும் அளிக்கப்படவில்லை என மத்திய நிதித்துறை இணை மந்திரி அணுராக் தாக்குர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அணுராக் தாக்குர், ‘கடன்களை வசூலிக்க வெளிநபர்களை நியமிப்பது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி சில வழிகாட்டி நெறிமுறைகளை பரிந்துரைத்துள்ளது.
உள்ளூர் போலீசாரால் குற்ற வழக்கங்கள் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபர்களை மட்டுமே கடன் வசூலிக்கும் முகவர்கள் வெளியில் இருந்து நியமிக்கப்பட வேண்டும்.
அப்படி கடன் வசூலிக்க செல்லும் வெளிநபர்கள் அநாகரிகமான முறையிலும் சட்டவிரோதமாகவும் கேள்விக்குரிய வகையிலும் வாடிக்கையாளர்களிடம் நடந்துக்கொள்ள கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வாராக்கடன்கள் தொடர்பாக கடன் பெற்றவர்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு அதன் பின்னரே ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மற்றபடி, வாராக்கடன்களை வசூலிக்க அடியாட்களை அனுப்பி வைக்கும் அதிகாரம் எந்த வங்கிக்கும் அளிக்கப்படவில்லை’ என தெரிவித்தார்.