

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மத்திய சிறைச்சாலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். உள்ளூர் போலீஸ், சிஆர்பிஎப் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் உதவியுடன் 20 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது 25 செல்போன்கள், சிம்கார்டுகள், ஐபாட்கள், பாகிஸ்தான் கொடி மற்றும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ஸ்ரீநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முகமது நவீத் ஜாட், கடந்த மாதம் 6-ம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது தப்பிச் சென்றான். இதற்கான திட்டம் ஸ்ரீநகர் மத்திய சிறைச்சாலையில் தீட்டப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே, பாதுகாப்பு படையினர் சிறையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். முக்கிய வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வெளியில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். #tamilnews