நிவாரண தொகை வழங்காததை கண்டித்து அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

முண்டியம்பாக்கம் மற்றும் கொசப்பாளையம் பகுதியில் நிவாரண தொகை வழங்காததை கண்டித்து அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

விக்கிரவாண்டி:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் ஏழை, எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள் பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு, நிவாரணம் அறிவித்தது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிசி, சக்கரை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு அமைப்புசாரா தொழிலாளர்களிடம் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பெற்றனர். ஆனால் இதுநாள் வரையிலும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வங்கி கணக்கில் அரசு அறிவித்த நிவாரண தொகை வந்து சேரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முண்டியம்பாக்கம் மற்றும் கொசப்பாளையம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் எஸ்.நாகலிங்கம் தலைமையில் நேற்று முண்டியம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சமூக இடைவெளியை கடைபிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டு அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனே வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com