

ஒடிஷா:
மருத்துவமனையில் கட்டணம் செலுத்த பணமில்லாததால் ரூ.7500க்கு விற்பனை செய்யப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட பெண் குழந்தை மோஹரன்னா மற்றும் கீதாஞ்லி மோஹரன்னா தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்ய மருத்துவமனை ஊழியர் கட்டாயப்படுத்தியதாக குழந்தையின் தந்தையான நிராக்கர் மோஹரன்னா இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோஹரன்னா அளித்த புகாரில் தனியார் மருத்துவமனை ஊழியர் குழந்தையை விற்று கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். ரிஹாகதா கிராமத்தில் வசித்து வரும் மோஹரன்னா மற்றும் கீதாஞ்சலி தம்பதியினர், குழந்தை பெற்றுக் கொள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றனர்.
எனினும் ASHA எனும் அமைப்பை சேர்ந்த பணியாளர் தனியார் மருத்துவமனையில் கீதாஞ்சலியை அனுமதிக்க உதவியுள்ளார். சிறப்பான மருத்துவ உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ஒப்புக் கொண்ட மோஹரன்னா - கீதாஞ்சலி தம்பதியினருக்கு ஆகஸ்டு 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
இதன் பின் மருத்துவ செலவுகளுக்கான கட்டணமாக ரூ.7,500 செலுத்த மருத்துவமனை நிர்வாகம் மோஹரன்னாவிடம் கேட்கப்பட்டது. இதையறிந்து அதிரந்து போன மோஹரன்னா மருத்துவமனையில் செலுத்த பணமில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் பிறந்த பெண் குழந்தையை விற்று பணத்தை செலுத்துமாறு மோஹரன்னா வற்புறத்தப்பட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து பிறந்த குழந்தையை குழந்தையில்லா தம்பதியினருக்கு மோஹரன்னா விற்றுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ASHA பணியாளர் ஒருவர், மருத்துவமனை ஊழியர் மற்றும் அங்கு பணியாற்றிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.