அனைத்து மெட்ரோ ரெயிலிலும் புதிய அறிவிப்பு திரை

அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் வழித்தடம், அடுத்துவரும் நிலையம் குறித்த அறிவிப்புகளை புதிய எல்.இ.டி. திரை மூலம் தெரிவிக்கப்பட உள்ளது.
மெட்ரோ ரெயில் (கோப்புப்படம்)
மெட்ரோ ரெயில் (கோப்புப்படம்)
Published on

சென்னை:

சென்னையில் முதல் கட்டமாக சென்ட்ரல்- விமானநிலையம், வண்ணாரப்பேட்டை, விமான நிலையம் ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுகிறது.

மொத்தம் 32 ரெயில் நிலையங்கள் உயர்மட்டத்திலும், சுரங்கப்பாதையிலும் அமைந்துள்ளன. 42 மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன.

4 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த மெட்ரோ ரெயிலில் பயணிகள் பயணம் செய்யும் போது பல்வேறு வசதிகளும், தகவல்களும் அளிக்கப்படுகின்றன.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அறிவிப்பு திரையில் தகவல் வெளியிடப்படுகிறது. அடுத்து வரும் ரெயில் நிலையம் குறித்து ஒவ்வொரு நிலையம் வரும் போது டிஜிட்டல் திரை மூலம் தகவல் கொடுக்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில்கள் குறிப்பிட்ட சில வினாடிகள் மட்டும் நின்று செல்வதால் பயணிகள் குழப்பம் அடையாமல் அடுத்து வரும் நிலையத்தில் இறங்குவதற்கு வசதியாக உஷார் படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு உதவுகிறது.

தானியங்கள் கதவு திறந்து, மூடப்படுவதால் பயணிகள் கவனமாக பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

மெட்ரோ ரெயில் முதல் கட்டத்தின் விரிவாக்கப்பணிகள் தற்போது வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவுபெறும் பட்சத்தில் முதல் கட்டம் முழுவதும் முடிவடையும்.

அதனால் அனைத்து மெட்ரோ ரெயில்களிலும் டிஜிட்டல் அறிவிப்பு திரையை மாற்றி புதிதாக அமைக்க வேண்டும். வழித்தடம் குறித்த வரைபடம் மற்றும் அடுத்து வரும் ரெயில் நிலையங்கள் குறித்த தகவல் போன்றவற்றை மாற்றி அமைக்க வேண்டும்.

புதிதாக அமைக்கப்பட உள்ள எல்.இ.டி. திரையில் மேலும் தொழில்நுட்பத்துடன் பல தகவல்களையும் இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

விரிவாக்கம் செய்யப்படுகின்ற வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வழித்தடத்தில் புதிதாக 10 ரெயில்களை இயக்க திட்டமிட்டு அவை தயாரிக்கப்பட்டு படிப்படியாக கொண்டு வரப்படும்.

தற்போது 4 புதிய ரெயில்கள் வந்துள்ளன. புதிய ரெயில்கள் மட்டுமின்றி தற்போது இயக்கப்படுகின்ற அனைத்து ரெயில்களிலும் புதிய எல்.இ.டி. திரை அமைக்கப்படும்.

ஒவ்வொரு பெட்டிக்கும் 2 எல்.இ.டி. திரை வீதம் இவை பொருத்தப்படும். இதில் ஒரு டிஜிட்டல் திரை வழித்தடம், அடுத்து வரும் நிலையம் பற்றிய தகவல்களை தரும். மற்றொரு டிஜிட்டல் திரையில் ரெயில் நிலையத்தில் கிடைக்கும் வசதிகள், இணைப்பு போக்குவரத்து வசதிகள் குறித்த தகவல் இடம்பெறும். பயணிகள் மெட்ரோ நிலையத்தில் இருந்து தொடர் பயணம் எளிதாக மேற்கொள்ள இது உதவியாக இருக்கும்.

இந்த டிஜிட்டல் திரை சிக்னல் சிஸ்டத்துடன் இணைக்கப்படுகிறது. இது தானாக இயங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com