

புவனேஸ்வரம்:
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று மதியம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வேனை நக்சலைட்டுகள் தாக்கினார்கள்.
சாலையில் புதைத்து வைத்து இருந்த குண்டை வெடிக்க செய்ததில் வேன் தகர்ந்தது. அதில் இருந்த 9 பேர் உயிர் இழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இறந்தவர்களில் ஒருவர் ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ரேபனா நவ்கான் என்ற கிராமத்தை சேர்ந்தவர். அவரது பெயர் மனோ ரஞ்சன் லெங்கா.
15 நாட்களுக்கு முன்பு இவரது தந்தை உயிர் இழந்து விட்டார். அதன் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுமுறையில் வந்திருந்த அவர் நேற்று முன்தினம் தான் மறுபடியும் வேலையில் சேர்ந்து இருந்தார். வேலைக்கு சேர்ந்த ஒரே நாளில் அவர் நக்சலைட்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
மனோரஞ்சன் லெங்காவுக்கு திருமணம் ஆகவில்லை. தாய்- தந்தை மற்றும் ஒரு சகோதரியுடன் வசித்து வந்த நிலையில் தந்தை இறந்து விட, இப்போது அவரும் உயிர் இழந்து இருக்கிறார். இதனால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
உயிர் இழப்பதற்கு 30 நிமிடத்துக்கு முன்பு தான் தனது தாயாருடன் போனில் பேசி உள்ளார். மகன் இறந்த செய்தி அறிந்ததும் தாயார் கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது. #tamilnews