

மத்தியப் பிரதேசத்தில் ஒரு இளைஞர் தள்ளுவண்டி கடையில் சாண்ட்விச் விற்பனை செய்து, அதன்மூலம் மாதத்திற்கு ரூபாய் 25 லட்சம் வருமானம் ஈட்டுவதாக எக்ஸ் தளத்தில் பயனர் பதிவிட்ட கருத்து வைரலாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால் நகரத்திற்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேக் சாஹூ என்பவர் குடிபெயர்ந்தார்.
அந்த இளைஞர் முதலில் ஒரு சிறிய ப்ரவுசிங் செண்டரை தொடங்கினார். இந்த கடையில் பெரிதளவில் வருமானம் இல்லாததால், ஆரம்பித்த ஓராண்டுக்குள் அந்த செண்டர் மூடும் நிலைக்கு வந்தது.
முதலில் தான் ஆரம்பித்த தொழில் தோல்வியில் முடிந்தாலும், சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரை தூண்டியது.
இதையடுத்து சாஹூ யூடியூப் மூலம் சாண்ட்விச் போன்ற உடனடி உணவுகளை தயாரிப்பது குறித்து கற்றுக் கொண்டார்.
இதற்கு முதலில் அவருக்கு ஒரு சிறிய தள்ளுவண்டி தேவைப்பட்டது. அதற்கு போதுமான அளவில் தன்னிடம் பணம் இல்லாததால் 30,000 ரூபாயை அவர் கடனாக வாங்கினார்.
சாஹூவிற்கு உணவு வியாபாரத்தில் முன் அனுபவம் இல்லாத போதிலும், யூடியூப் மூலம் சமையல் குறிப்புகளை கற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சாண்ட்விச் உணவுகளை விற்பனை செய்ய தொடங்கினார்.
ஹரி ஹர் சாண்ட்விச் என்று பெயிரடப்பட்ட அந்த உணவு சிற்றுண்டி, காலப்போக்கில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்த்தது.
இந்த சிற்றுண்டி கடையில் பொதுவாக 600க்கும் மேற்பட்ட சாண்ட்விச்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் வார இறுதி நாட்களில் 1,000க்கும் மேற்பட்ட சாண்ட்விச்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போபாலில் மக்கள் நடமாட்டம் அதிக உள்ள பகுதிகளில் அமைந்துள்ள இந்த சிற்றுண்டி கடை, சுமார் 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவதாகவும் அந்த அவர் தெரிவித்துள்ளார்.
சாஹூ ஆரம்பித்த சிற்றுண்டி குறித்து எக்ஸ் தளத்தில் பயனர் வெளியிட்ட பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவிட்டனர்.
அந்த பதிவில் ஒரு பயனர், ‘தோல்வியடைந்த ஜெராக்ஸ் கடையில் இருந்து மாதம் ரூ.25 லட்சம் வருமான ஈட்டும் தெருவோர உணவு வியாபாரம் வரை’ என்று குறிப்பிட்டு வாழ்த்துகளை கூறியுள்ளார்.