டிரம்ப் எச்சரிக்கை: ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் இந்தியாவின் முதலீடு பாதிக்குமா?

கடந்தாண்டு ஈரானின் சபஹார் துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது. ஈரானின் சபாகர் துறைமுகம் வழியாக மற்ற நாடுகளுக்கு இந்தியா சரக்குகள் அனுப்பி வருகிறது.
டிரம்ப் எச்சரிக்கை: ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் இந்தியாவின் முதலீடு பாதிக்குமா?
Published on

ஈரானில் சபஹார் துறைமுகத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 2018 ஆம் ஆண்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அனுமதி அளித்திருந்தது.

இதனையடுத்து, 2018-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் சபஹார் துறைமுகத்தை இந்தியா குத்தகைக்கு எடுத்து. பின்னர் இந்த குத்தகை ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வந்தது. இறுதியாக கடந்தாண்டு ஈரானின் சபஹார் துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக மத்திய ஆசிய நாடுகளுக்கு சாலை வழியாக சரக்குகளை அனுப்பலாம். ஆனால் பாகிஸ்தான் உடன் இந்தியா மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் ஈரானின் சபஹார் துறைமுகம் வழியாக மத்திய ஆசிய நாடுகள், ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா சரக்குகள் அனுப்பி வருகிறது. மேலும் அந்த நாடுகளில் இருந்து இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. சபஹார் துறைமுகத்தால் 30 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து செலவு குறைவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மீண்டும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகள் கொள்கையை மீண்டும் அமல்படுத்தியுள்ளார்.

டிரம்பின் இந்த உத்தரவு ஈரானில் சபஹார் துறைமுகம் வழியாக இந்தியா மேற்கொண்டு வரும் வர்த்தகத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த துறைமுகத்திற்காக இந்தியா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் அதிபர் டிரம்பை விரைவில் சந்திக்க உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com