

ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 49.96 லட்சம் பயணிகள் என்ற பெரும் எண்ணிக்கையிலான வருகைக்கு பிறகு, சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 80 லட்சம் பெண்களும் அவர்களுடன் வந்த ஒரு பயணியும் உத்தர பிரதேச அரசின் இலவச பேருந்து பயண வசதியை பயன்படுத்திக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யோகி ஆதித்யநாத் அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பண்டிகை கால பயணத்தை எளிதாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பயண வசதியை வழங்கியது; நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு வரை இதற்கான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததாக அவர்கள் கூறினர்.
உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழக (UPSRTC) பேருந்துகளில் பெண்கள் தங்கள் துணையுடன் (ஒருவருடன்) இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்தத் திட்டம் ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 29-ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருந்தது என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.
உ.பி. மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் தகவல்படி, ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று 9.26 லட்சத்திற்கும் அதிகமான பெண்களும் அவர்களுடன் வந்தவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். இதில் 6.03 லட்சத்திற்கும் அதிகமான பெண்களும், 3.22 லட்சத்திற்கும் அதிகமான உடன் வந்த பயணிகளும் அடங்குவர்.
ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளின் தரவுகளை ஒருங்கிணைத்து பார்க்கையில், இரண்டு நாட்களில் 59.23 லட்சத்திற்கும் அதிகமான பயண சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இந்த எண்ணிக்கையில் 38.51 லட்சத்திற்கும் அதிகமான பெண்களும், 20.71 லட்சத்திற்கும் அதிகமான உடன் வந்த பயணிகளும் அடங்குவர்.
பயணிகள் இந்த நடவடிக்கையை வரவேற்றனர்; இலவச பேருந்து பயண திட்டம் பண்டிகை காலத்தில் பல குடும்பங்களுக்கு நிதி ரீதியான நிவாரணம் அளித்தது மட்டுமின்றி, சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு 'ராக்கி' கட்டுவதற்காக பயணம் செய்வதையும் எளிதாக்கியது என்று அவர்கள் கூறினர்.