

புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.2800 கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். சி.பி.ஐ., அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
கடந்த நவம்பர் 6-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அரசின் முன் அனுமதி பெறாமல் அரசு ஊழியர் ஒருவரை பணமோசடி வழக்கின் கீழ் கைது செய்ய முடியாது என்று தெரிவித்து இருந்தது. இந்த தீர்ப்பின்படி கெஜ்ரிவால், மீது வழக்கு தொடர அனுமதி கோரி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. அவரும் அதற்கு ஒப்புதல் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீது பணமோசடி வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.