இந்த அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்யுங்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆர்.ஏ.டி. சோதனையை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி அனைத்து மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்த நிலையில் காய்ச்சல், ஜலதோ‌ஷம் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யுங்கள் என்று மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ்பூ‌ஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளை பரிசோதித்து அவர்களை விரைவாக தனிமைப்படுத்துவது வைரஸ் பரவலை தடுப்பதில் முக்கியமானது.

காய்ச்சலுடன் தலைவலி, தொண்டை வலி, மூச்சு திணறல், உடல்வலி, சுவை, வாசனை இழப்பு போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் நபர் அல்லது காய்ச்சலுடன் இந்த அறிகுறிகள் இல்லாமலேயே இருந்தாலும் சந்தேகிகப்படும் நபராக கருதி உடனே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முடிவுகள் வர 5 முதல் 8 மணி நேரம் ஆகும் என்பதால் நோய் தொற்றை உறுதிப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் ஆன்டிஜென் சோதனைகளை ‘ஆர்.ஒ.டி.) அதிகரிக்க வேண்டும். 24 மணி நேர அடிப்படையில் பல ஆர்.ஏ.டி. சோதனை மையங்களை அமைக்கவும், அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆர்.ஏ.டி. சோதனையை அனுமதிக்க வேண்டும். தேவையான பரிசோதனை உபகரணங்களை வாங்குவதை விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com