search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம்- புதிய ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா முயற்சி
    X

    மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம்- புதிய ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா முயற்சி

    • சிவசேனா கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்து இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.
    • எதிர்க்கட்சியான பா.ஜனதா புதிய அரசை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே கடந்த 20-ந்தேதி சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரி அவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரட்டினார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளனர்.

    மொத்தம் உள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏக்களில் 38 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் உள்ளனர். சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் அவருடன் உள்ளனர். மொத்தம் 50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அதிருப்தி எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருப்பதால் உத்தவ் தாக்கரே ஆட்சி பெரும்பான்மையை இழந்து கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தனது அரசை காப்பாற்ற ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை உத்தவ் தாக்கரே மேற்கொண்டார்.

    சிவசேனா அனுப்பிய கடிதத்தை ஏற்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கும் கடந்த சனிக்கிழமை துணை சபாநாயகர் நர்ஹாரி ஜிர்வால் தகுதி நீக்க நோட்டீசை அனுப்பினார். இதற்கு நேற்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இதை எதிர்த்து ஷிண்டே அணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவை தாங்கள் வாபஸ் பெற்று விட்டதாகவும், அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து இருந்தனர். தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த மனு நீதிபதிகள் சூரியகாந்த், பர்டிவாலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான மகாராஷ்டிரா மாநில சட்டசபை செயலகத்தின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஜூலை 12-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஜூலை 12-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் தகுதி நீக்க நோட்டீசுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    மேலும் சட்டசபையில் பலப்பரீட்சை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற மகாராஷ்டிரா அரசு விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிராகரித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாகும். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை வகித்து வரும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல் சுற்று வெற்றியாக கருதப்படுகிறது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு குறித்து ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, "தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு பால்தாக்கரேவின் இந்துத்துவா கொள்கைக்கும், எனது குரு ஆனந்த் திதேகவின் லட்சியத்துக்கும் கிடைத்த வெற்றியாகும்" என்றார்.

    சிவசேனா கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்து இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிக்கிறது. எதிர்க்கட்சியான பா.ஜனதா புதிய அரசை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மகாராஷ்டிரா முன்னாள் பா.ஜனதா முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆகியோரை ஏக்நாத் ஷிண்டே கடந்த சில தினங்களுக்கு முன்பு வதேதாராவில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து புதிய ஆட்சியை அமைப்பதில் பா.ஜனதா தீவிரமாக இருக்கிறது.

    ஏக்நாத் ஷிண்டே ஓரிரு நாட்களில் மும்பை வருகிறார். அவர் கவர்னர் கோஷியாரியை சந்தித்து மனு ஒன்றை அளிக்க உள்ளார். மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இதனால் சட்டசபையில் உத்தவ் தாக்கரே அரசுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

    மற்றொரு திட்டமாக பா.ஜனதாவே கவர்னரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளது. சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும். இதையேற்று உத்தவ் தாக்கரே பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிடுவார்.

    சட்டசபையில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து விடும். அப்போது புதிய ஆட்சியை அமைக்கலாம் என்று பா.ஜனதா கருதுகிறது. வருகிற 3-ந்தேதிக்குள் புதிய அரசை பா.ஜனதா அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்ய ஏக்நாத் ஷிண்டே முடிவு செய் துள்ளார். இது தொடர்பாக அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் அமைப்பு விதிகள் குறித்து அவர் மூத்த வக்கீல்களிடம் கேட்டு அறிந்தார்.

    மகாராஷ்டிராவில் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு அரசியல் பரபரப்பு நீடித்து இருக்கும்.

    Next Story
    ×