சௌரவ் கங்குலி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல்; காவல்துறை விசாரணை தொடங்கியது

இத்தகைய கடிதங்கள் வந்து கொண்டிருந்ததாகவும், ஆனால் ஆரம்பத்தில் அவை பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
sourav ganguly
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சௌரவ் கங்குலிக்கு கடந்த சில மாதங்களாக பல மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன என்றும், அவற்றில் ஒன்று தன்னையும் தனது மனைவி டோனா கங்குலியையும் கொன்றுவிடுவதாக எச்சரித்திருந்தது என்றும் அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த கடிதங்களை அனுப்பியது யார் என்பதை கண்டறிய காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

மிரட்டல் கடிதம்:

தற்போது வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவராக இருக்கும் கங்குலி, திங்கள்கிழமை தனது அலுவலகத்திற்கு வந்த சமீபத்திய கடிதத்தை தொடர்ந்து, தெற்கு கொல்கத்தாவில் உள்ள தாக்கூர் புகுர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ளார் என்று காவல் துறை அதிகாரி கூறினார்.

முன்னாள் பி.சி.சி.ஐ. (BCCI) தலைவரான சௌரவ் கங்குலி பெயருக்கு கடந்த ஆறு மாதங்களாகவே இத்தகைய கடிதங்கள் வந்து கொண்டிருந்ததாகவும், ஆனால் ஆரம்பத்தில் அவை பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை அவரது அலுவலகத்திற்கு வந்த இரண்டு கடிதங்களில், கங்குலி மற்றும் அவரது மனைவியை கொல்லவும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தீங்கு விளைவிக்கவும் வெளிப்படையான மிரட்டல்கள் இருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரரின் மேலாளர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர விசாரணை:

கடிதங்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்து வருவதாகவும், அவற்றை அனுப்பியவரின் அடையாளம் மற்றும் நோக்கத்தை கண்டறிய முயற்சிப்பதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

"நாங்கள் இந்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளோம். இந்த கடிதங்கள், அவற்றின் மூலம் மற்றும் கூரியர் சேவை விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, இதற்கு பொறுப்பான நபரை கண்டறிய முயற்சிக்கிறோம்," என்று அந்த அதிகாரி கூறினார்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பெல்காரியாவை சேர்ந்த ஒரு நபர், கூரியர் சேவை மூலம் இந்த கடிதங்களை அனுப்பியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

காவல் துறை விளக்கம்:

அனுப்பியவர் பயன்படுத்தியதாக கூறப்படும் சிம் கார்டின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளதாகவும், பார்சல் விவரங்களை சேகரிக்க சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

"நாங்கள் கூரியர் சேவையை சேர்ந்தவர்களிடம் பேசியுள்ளோம் மற்றும் ஒரு மொபைல் எண்ணை கண்டறிந்துள்ளோம். அந்த எண்ணின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.

அனைத்து கடிதங்களும் ஒரே நபரால்தான் அனுப்பப்பட்டனவா என்பதையும், இந்த மிரட்டல்களுக்கான காரணம் என்ன என்பதையும் கொல்கத்தா காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com