மகனைத் தேடிய மூத்த குடிமகனிடம் ரூ.29 லட்சம் மோசடி: கொல்கத்தாவில் அதிர்ச்சி சம்பவம்!

தொடர்ந்து பணம் பெற்ற போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்துள்ளார்.
Kolkata  Money laundering
Published on

தனது காணாமல் போன மகனைத் தேட உதவி செய்வதாகக் கூறி, மூத்த குடிமகன் ஒருவரிடம் தனியார் புலனாய்வாளர் ஒருவர் ரூ.29 லட்சத்துக்கும் அதிகமான தொகையை ஏமாற்றிப் பறித்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பர்த்வான் பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஓய்வுபெற்ற அரசு அதிகாரி (WBCS) என்பவரின் 29 வயது மகன், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று திடீரென காணாமல் போனார். உள்ளூர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், கவலையடைந்த தந்தை கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தை அணுகினார். மகனைக் கண்டுபிடிக்க ரூ.5 லட்சம் கட்டணமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதற்கட்டமாக ரூ. 4.5 லட்சம் செலுத்தப்பட்டது.

பணம் பறிப்பு

அந்தத் தனியார் நிறுவனம் இந்த வழக்கை சாம்ராட் பௌமிக் என்ற நபரிடம் ஒப்படைத்தது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், காணாமல் போன இளைஞர் புருலியா-ஜார்க்கண்ட் எல்லைக்கு அருகில் இருப்பதாகவும், அவரைப் பற்றிய முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சாம்ராட் பௌமிக் போலியான வாக்குறுதிகளை அளித்தார்.

ரகசியத் தகவலாளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும், களத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் நிதி தேவை என்றும் கூறி, தந்தையின் பதற்றத்தைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் பணம் கோரினார். இதை நம்பிய தந்தை, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் ரொக்கம் மூலமாக மொத்தம் ரூ. 25,34,746 வழங்கினார்.

மோசடி வெளிச்சத்திற்கு வந்த விதம்

தொடர்ந்து பணம் பெற்ற போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த தந்தை 2025 டிசம்பர் 20 அன்று சாம்ராட்டைச் சந்தித்துத் தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டார். அதற்கு சாம்ராட் ரூ.1 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, தொடர்பைத் துண்டித்ததுடன் அவருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இதற்கிடையில், சேவை வழங்காததால் தனியார் புலனாய்வு நிறுவனம் தான் பெற்ற ரூ. 4.5 லட்சத்தை முழுமையாகத் திருப்பி அளித்துவிட்டது.

காவல் துறை விசாரணை

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூத்த குடிமகன், ஆகஸ்ட் 8 அன்று காரியாஹாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், முதலமைச்சரின் 'ஜனதார் தர்பார்' நிகழ்விலும் இச்சம்பவம் குறித்து முறையிட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன மகனைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது காரியாஹாட் காவல் துறையினரும் சிஐடியும் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. சாம்ராட் பௌமிக்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com