ரூ.5600 கோடி சைபர் மோசடி.. 18 மாநிலங்களில் கைவரிசை காட்டிய நெட்வொர்க் அம்பலம்

41 கணக்குகளில் 1 லட்சம் முதல் 50 கோடி ரூபாய்க்குள்ளும் பணம் இருந்தது.
சைபர் மோசடி
சைபர் மோசடி
Published on

18 மாநிலங்களில் ரூ.5600 கோடிக்கு நடந்த இணையவழி மோசடி கும்பல் உத்தரப் பிரதேசத்தில் பிடிபட்டுள்ளது.

முகமது ஷதாப் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உத்தரப் பிரதேச காவல்துறை மோசடி வழக்குப் பதிவு செய்தது.

ஷாஜேப் வாரிஸ், சல்மான் மற்றும் ஆரிப் ஆகியோர் தன்னிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஷதாப் குற்றம் சாட்டினார்.

இதன் பின்னர் நடந்த விசாரணையில் ஷாஜேப் தலைமையில் இயங்கி வந்த மோசடி கும்பல் குறித்த திடுக்கிடும் தகவல்களை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

வங்கிக் கணக்குகள்

காவல்துறை கிட்டத்தட்ட 10,000 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், இந்தக் கும்பலுக்கு 14 வங்கிகளில் 77 கணக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. அவற்றை முடக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காவல்துறை ஆணையர் ரகுபீர் லால் கூற்றுப்படி, இந்த கணக்குகளில் சுமார் 5,600 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.

சில கணக்குகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூன்று கணக்குகளில் 200 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், ஆறு கணக்குகளில் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், எட்டு கணக்குகளில் 50 முதல் 100 கோடி ரூபாய்க்குள்ளும், 41 கணக்குகளில் 1 லட்சம் முதல் 50 கோடி ரூபாய்க்குள்ளும் பணம் இருந்தது.

வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு

இந்த மோசடியில் சில வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

ஒரு பெரிய அரசு வங்கியின் சர்வேயர் ஒருவரின் பெயர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர், போலி ஆவணங்களின் அடிப்படையில் கும்பல் உறுப்பினர் ஆரிப்க்கு ரூ.1.75 கோடி கடன் வழங்கியுள்ளார். அதற்கு ஈடாக, அவர் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார்.

இணையவழி மோசடி

முன்னதாக, இரண்டு பெரிய இணையவழி மோசடி வழக்குகளில் வங்கி ஊழியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தக் கும்பல் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது.

தேசிய இணையக் குற்ற புகார் பதிவு இணையதளத்தில் (NCRP) பெறப்பட்ட 86 புகார்களிலும் ஷாஜேபின் பெயர் இடம்பெற்றிருந்தது. அவர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது கூட்டாளி சல்மானும் பிடிபட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 14 இணையவழி மோசடியாளர்களின் பெயர்கள் தெரியவந்தன. இவர்களில் இருவர் சிறையில் உள்ளனர்.

மோசடி வலையமைப்பு

இந்தக் கும்பலின் உறுப்பினர்களில் ஒருவரான இக்லக், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரின் மகன் ஆவார்.

அவரும் அவரது கூட்டாளியான ஆரிபும் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இக்லாக் கான்பூரில் ஒரு ஹோட்டலை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து இந்த மோசடி வலையமைப்பை இயக்கி வந்துள்ளார்.

இந்தக் காலகட்டத்தில், அவர் ஷாஜேபுடன் தொடர்பு கொண்டார். இக்லாக், கடன் வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து ஆவணங்களைப் பெற்று, போலி நிறுவனங்களைப் பதிவுசெய்து, வங்கிக் கணக்குகளை திறப்பார்.

மோசடி செய்யப்பட்ட நிதிகள் இந்தக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டன. அவருடைய ஐந்து கணக்குகளில் சுமார் ரூ.41 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்லாக்கின் மாமனாரும் ஒரு உதவி ஆய்வாளர் ஆவார்.

தனது மாமனாரின் உதவியுடன், பழைய இரும்பு வியாபாரிகள், தோல் பதனிடும் ஆலை நடத்துபவர்கள் மற்றும் இறைச்சிக் கூட நிறுவனங்களுக்கு சொந்தமான கணக்குகளைப் பெற்று, மோசடி செய்யப்பட்ட நிதியை அவர்களுக்கு மாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

2024ஆம் ஆண்டில் எட்டு நாட்களுக்குள் இக்லாக்கின் பேங்க் ஆப் பரோடா கணக்கிலிருந்து ரூ.180 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. அவரையும் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com