

புதுடெல்லி:
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களுக்கும் புதிய கவர்னர் நியமனம் செய்யும் வரை அவர் இந்த பொறுப்புகளை வகிப்பார்.
தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் பதவி விலகியதை தொடர்ந்து அதே பதவியை கவனிக்கும் பொறுப்பு மற்றொரு தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.