

திருவனந்தபுரம்:
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார். அங்கு நிலச்சரிவால் பாதிப்பு அடைந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வுசெய்த பிரதமர் மோடி, மீட்புப்பணி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இந்நிலையில், ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி கூறியதாவது:
நிலச்சரிவு மீட்புப் பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், தன்னார்வலர்கள், டாக்டர்கள் என அனைவரும் ஈடுபட்டனர்.
இந்தப் பேரிடர் சாதாரணமானது அல்ல. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கானோரின் கனவுகளை தகர்த்துள்ளது.
சூழ்நிலையை நேரில் பார்த்தேன். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களையும், காயம் அடைந்தவர்களையும் சந்தித்தேன்.
பேரிடர் குறித்து அறிந்ததும் முதல்வரை தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தேன்.
கேரளாவுக்கு மத்திய அரசு தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவி வந்தது. அது தொடரும்.
இறந்தவர்களின் உறவினர்கள் தனித்துவிடப்பட மாட்டார்கள் என அவர்களுக்கு உறுதி அளிக்கிறேன். இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவர்களுடன் துணை நிற்கிறோம்.
கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும். பணப்பற்றாக்குறையால் எந்த பணியும் நிறுத்தப்படாது என உறுதி அளிக்கிறேன் என தெரிவித்தார்.