

கைத்தறித் தயாரிப்புகளை வாங்கவும், அவற்றின் மீது உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் வகையில் வீடியோக்களை உருவாக்கவும் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கைத்தறி தினத்தை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, இத்தினத்தைக் கொண்டாடுவது நாட்டின் நெசவாளர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் ஒரு கைகொடுக்கும் செயலாக அமையும் என்று கூறினார்.
"ஆகஸ்ட் 7; அன்று நாம் தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்தியாவின் கைத்தறித் துறையின் பன்முகத்தன்மையை நாம் பிரபலப்படுத்துவோம். உங்களுக்கு பிடித்தமான கைத்தறி தயாரிப்புகளைக் கொண்டு, 'Get Ready With Me' போன்ற வீடியோக்களை உருவாக்கி, அவற்றை சமூக ஊடகங்களில் பகிருங்கள்," என்று அவர் கூறினார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதும், நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்ததும் 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதியில்தான் என்பதை பிரதமர் மக்களுக்கு நினைவூட்டினார்.
"கடந்த வாரம்தான் நீங்கள் அனைவரும் நண்பர்கள் தினத்தை கொண்டாடினீர்கள். ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரும் கைத்தறி தினத்தையும் அதே உற்சாகத்துடன் கொண்டாடுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள மக்களை கைத்தறி தயாரிப்புகளின் பக்கம் ஈர்க்கும் வகையில் அனைவரும் குறும் வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பகிருமாறு வலியுறுத்திய மோடி, இந்தியாவின் சுயசார்பை உறுதி செய்வதும், நெசவாளர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி ரீதியாக உதவுவதும் இதன் நோக்கம் என்று கூறினார்.
"நெசவாளர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் உதவும் வகையில் கைத்தறி தயாரிப்புகளை வாங்குவோம் மற்றும் வீடியோக்களை உருவாக்குவோம்," என்று அவர் கூறினார்.
"தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்கு. அதற்காக, மிகச்சிறிய மற்றும் ஏழ்மையான குடும்பங்கள் கூட பொருளாதார ரீதியாக வளம் பெற வேண்டும்," என்று கூறிய பிரதமர், ஒவ்வொரு கைத்தறி பொருள் வாங்குதலும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், கைவினை கலைஞர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும் பங்களிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.