வினாத்தாள் கசிவைத் தடுக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

முறையற்ற நடைமுறைகளை தடுப்பதற்கான சட்ட கட்டமைப்பை இந்த திருத்தங்கள் மேலும் வலுப்படுத்தும்.
மக்களவை
Published on

நாட்டின் எதிர்காலமாக திகழும் மாணவர்களின் நலன்களை பாதுகாக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ள அரசு, வினாத்தாள் கசிவை தடுக்கும் சட்டத்தை மேலும் கடுமையாக்கும் மசோதாவை நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

'இந்தியா' கூட்டணியை சேர்ந்த பல எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், 'பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா 2026', மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மக்களவை இந்த மசோதாவை புதன்கிழமையன்று நிறைவேற்றி இருந்தது.

பிரதமர் உறுதி:

மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே, பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்; அதில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்கும் முக்கிய பணி நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வு முறையை மேம்படுத்துவது அவசியமாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மாணவர்களின் எதிர்காலத்துடன் வினாத்தாள் கசிவு தொடர்பான எந்தவொரு கும்பலும் விளையாடாத வகையில் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

ரூ. 10 கோடி அபராதம்:

திருத்தப்பட்ட மசோதாவின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.

திட்டமிட்ட குற்றங்களை பொறுத்தவரை, குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 கோடி ரூபாய்க்கு குறையாத அபராதமும் விதிக்கப்பட வேண்டும் என்று மசோதா முன்மொழிகிறது.

அரசு உறுதி:

மசோதா மீதான ஏழு மணி நேர விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், பொது தேர்வுகள் வெளிப்படையானதாகவும், நம்பகமானதாகவும், தகுதியின் அடிப்படையில் அமைந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் மாணவர்களின் உண்மையான முயற்சிகள் பாதுகாக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளதாக கூறினார்.

மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதோடு, பொது தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளை தடுப்பதற்கான சட்ட கட்டமைப்பை இந்த திருத்தங்கள் மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் கசிவு, விடைத்தாள்கள் மற்றும் கணினி அமைப்புகளில் முறைகேடு செய்தல், தேர்வு நடைமுறைகளை திரித்தல், போலி இணையதளங்கள் மற்றும் அனுமதி அட்டைகளை உருவாக்குதல் முதல் தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளுக்கு உதவும் திட்டமிட்ட முயற்சிகள் வரை பல்வேறு குற்றங்களை இச்சட்டம் விரிவாக கையாள்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com