'இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து ரூ.448 கோடி லாபம் பார்த்த NTA'.. காங்கிரஸ் கடும் தாக்கு

தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
'இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து ரூ.448 கோடி லாபம் பார்த்த NTA'..  காங்கிரஸ் கடும் தாக்கு
Published on

2024 நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான CUET, பொறியியல் படிப்புகளுக்கான JEE தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய தேர்வு முகமை அமைப்பு இதுவரை நடத்திய தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி  வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த புதன்கிழமை மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் இந்த தகவலைத் தெரிவித்திருந்தார்.

குறிப்பாகக் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட CUET பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையின் வருமானம் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22 ஆண்டில் ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய தேர்வு முகமை மாணவர்களின் எதிர்காலத்தை வெறும் வருமானம் ஈட்டுவதற்கான வழியாக மாற்றியுள்ளது என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், நீட் தேர்வு ஊழலின் மையமாகத் தேசியத் தேர்வு முகமை உள்ளது. அது, மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு அங்கம். ஆனால், தனது பணிகளை தனியார் வியாபாரிகளிடம் ஒப்படைத்துச் செயல்படுகிறது. தேசிய தேர்வு முகமையானது தற்போது, மெகா மோசடிகள் நடைபெற்ற மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்குத் தலைமை தாங்கிய ஒருவரின் தலைமையில் உள்ளது.

மாணவர்களிடமிருந்து ரூ.3,512.98 கோடி வசூலித்துள்ள NTA, தேர்வுகளை நடத்துவதற்காக ரூ.3,064.77 கோடி செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

ஆனால் இந்த லாபத்தைத் தேசிய தேர்வு முகமை, தானாகவே தேர்வு நடத்தும் அளவுக்கு அதன் திறமையை மேம்படுத்தப் பயன்படுத்தவில்லை. எனவே, மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை வருவாய் ஈட்டும் நடவடிக்கையாக மோடி அரசு சீரழித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com