

இண்டிகோ விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்ய இருந்த பயணி ஒருவர், தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக பாதுகாப்பு ஊழியர்களிடம் தெரிவித்து பீதி ஏற்படுத்தியததை தொடர்ந்து, விமானம் ஒரு மணி நேரம் காலதாமதாக சென்றது.
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சம்பவம் நடைபெற்ற அன்று காலை 8 மணிக்கு இண்டிகோ 6E333 பயணிகள் விமானம் டெல்லி புறப்பட இருந்தது.
அப்போது அந்த விமான நிலையத்தின் சஹார் முனையத்தில் உள்ள போர்டிங் கேட் 45A வழியாக, காலை 7.25 மணியளவில் 55 வயதான அனுஜ் ஜெயராம் சுவர்ணா என்பவர் விமானத்திற்கு பயணம் செய்வதற்கு வந்துள்ளார்.
அவரை பரிசோதனை செய்த அதிகாரிகள், அவரிடம் தீப்பெட்டி, லைட்டர், கத்தரிக்கோல், நகவெட்டி, திரவம் அல்லது ஸ்ப்ரே போன்ற பொருட்களை எடுத்து செல்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.
அப்போது அந்த பயணி, தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார். இதனால் பீதியடைந்த அதிகாரிகள் மத்திய தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், இண்டிகோ விமானத்தில் டெல்லி செல்ல இருந்த பயணிகளை வெளியேற்றி, பின்னர் விமானம் முழுவதும் முழுவீச்சில் சோதனை மேற்கொண்டனர்.
இறுதியில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படாததை தொடர்ந்து, அந்த பயணி பொய் கூறியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 8 மணிக்கு புறப்பட இருந்த விமானம், 9 மணியளவில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
இண்டிகோ நிறுவனத்தின் உதவி பாதுகாப்பு மேலாளர் அளித்த புகாரின்பேரில், வெடிகுண்டு மிரட்டல் எனக் கூறி பயணிகளிடையே பீதியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி,
இண்டிகோ நிறுவனத்திற்கு நிதி இழப்புகளையும் விளைவித்ததற்காக, சஹார் போலீசார் பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 125 மற்றும் 351(2) இன் கீழ் அனுஜ் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.